மாபெரும் மார்க்க மேதையும், சீர்திருத்தவாதியுமான இவர் ஹிஜ்ரி 661ல்
சிரியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இமாமாகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே
குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து
விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு
வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இச்சிறுவருக்கு
இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் சிறந்த அறிஞராக விளங்குவார் என்று
முன்னறிவுப்புச் செய்தார்.
இவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட
ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு
ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ “இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்ல” என்று போற்றுகின்றார்.
கி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர்
வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற்
சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. “அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சி” என்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.
அப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது
வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். “பித்அத்” என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்கெதிரான
பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார்.
ஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து
வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை
புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள்
தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து
கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும்
கௌரவித்தனர்.
எகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற
போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது
என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ்
போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக
வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று
வியந்தார் காஸான்.
யூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த
பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். கற்பாறைக்கு மக்கள்
தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர்
கல்வெட்டும் தொழிலாளர் அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி
அப்பழக்கத்திற்கு சாவுமணி கட்டினார். மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ,
நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து
இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன்
அவர்கள் மீது போர் மேற்கொண்டார்.
இவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம்
துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள்
ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர்
முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக
எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபோதும்
இவர் பின்வாங்கவே இல்லை. இருப்பினும் எதிரிகளின் சூழ்சியால் இவரையும் இவரது சகோதரர்களையும்
சிறையில் தள்ளப்பட்டனர்.
சிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற
சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின்
மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட விடுதலை வேண்டாமென்று
கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள்.
ஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர்
கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும்
சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்துவம் இந்தோ-கிரேக்க
தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார்.
சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.
இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி
வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத் தம்
கொள்கையை ஏற்குமாறு செய்தார்.
ஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ
வரவழைத்து இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக கூறிய போது
அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய
விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில்
பலத்த காயத்தை ஏற்படுத்தினார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம்
அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத் தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத்
துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ
உண்டு.
ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலிருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு
ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி (ஸல்) அவர்களுடைய கப்றுக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு
செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும்
கிளர்ச்சி செய்யவே மீண்டும் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
சிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு
எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதிவரும்பொழுது
இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா
தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு
நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.
இவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா,
(மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20
பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா.
தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவரைபற்றி நாம் இன்னும் அதிகமாக படிக்கவேண்டும், நமது பிள்ளைகளுக்கு இவரை போன்ற மார்க்க
அறிஞர்களின் வரலாறுகளையும், அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள், அவர்கள்
செய்த சாதனைகள் போன்ற அனைத்தையும் சொல்லி இஸ்லாமிய முறையில் வளர்ப்போம்....
இஸ்லாமிய வரலாறுகளை காப்போம்.. இன்ஷாஅல்லாஹ்..!
No comments:
Post a Comment