Saturday, July 16, 2016

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்

       திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

    அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்:
  திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், வசனங்களுக்கான நீண்ட விளக்கவுரைகள் (தஃப்சீர்) அரபி மொழியில் ஏராளமாக உள்ளன. அவற்றில் தஃப்சீர் தபரீ, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் கபீர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் அல்ஜவாஹிர், தஃப்சீர் அல்மனார் ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும். அரபியல்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் வெளிவந்துள்ளன.

   தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகள் சமீப காலத்தில் தான் வெளிவந்தன. உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்சீரில் குர்ஆனில் மஜீத்’ எனும் பெயரில் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். ‘ரூஹுல் பயான்’ எனும் அரபி விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த விரிவுரை 1937ஆம் ஆண்டு தொடங்கி, 1961வரை 7 பாகங்களில் வெளிவந்தது.
அன்வாருல் குர்ஆன்கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் 1955ஆம் ஆண்டு முதல் ‘அன்வாருல் குர்ஆன்’ எனும் தமிழ் விரிவுரையை வெளியிட்டார்கள். தென்காசி மௌலானா, இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதிய இந்த விரிவுரை, குர்ஆனின் 30 பாகங்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளில் வெளிவந்து நிறைவடைந்தது.

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்
    வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு முதல் ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் விளக்கவுரை ஒன்றை தமிழில் வெளியிட்டுவருகிறது. பாக்கியாத் பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் இந்த விரிவுரையை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகின்றனர். கைக்கு அடக்கமான வடிவில் இதுவரை 5 தொகுதிகள் வெளி வந்துள்ளன. கல்லூரி நிர்வாகம் இந்த விளக்கவுரையை முழுமையாக வெளியிடுவதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது.

தஃப்சீர் இப்னு கஸீர்
    சிரியா நாட்டைச் சேர்ந்த இமாம் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 700-774; கி.பி. 1300-1372) அரபி மொழியில் எழுதிய முதல் தரமான திருக்குர்ஆன் விரிவுரையே ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ என அறியப்படுகிறது. நான்கு பாகங்களில் வெளிவந்த இந்த விரிவுரையை பேராசிரியர் முஹம்மத் அலீ அஸ்ஸாபூனி அவர்கள் மூன்று பாகங்களில் சுருக்கித் தந்துள்ளார்.

      இந்தச் சுருக்கப் பதிப்பைத் தமிழில் கொண்டு வரும் பெரு முயற்சியில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மொத்தம் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு, முதலாவது பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

      வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி தலைமையில் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று இத்திருப்பணியை மேற்கொண்டுள்ளது.

   இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பது வருத்தமான செய்திதான்.

No comments:

Post a Comment