Sunday, November 1, 2015

நபிமொழித் தொகுப்புகள் – ஒரு வரலாற்றுப் பார்வை!

                இஸ்லாத்தில் திருக்குர்ஆனுக்கு அடுத்த மூலாதாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் வாழ்வும் அடங்கிய ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள்தான். அரபி மொழியில் நூற்றுக்கணக்கான நபிமொழித் தொகுப்புகள் இருந்தும், தமிழில் அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீண்ட காலம் கழிந்து விட்டது. அண்மை காலமாகவே இதில் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

            1954ஆம் ஆண்டு உத்தமபாளையம் எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீ’ என்ற பெயரில் ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பிரதியைத் தமிழில் வெளியிட்டார்கள். இது ஹுசைன் பின் முபாரக் அஸ்ஸுபைதீ (ரஹ்) அவர்கள் அரபி மூலத்தைச் சுருக்கி வெளியிட்ட பிரதியின் தமிழாக்கமாகும்.

         அடுத்து 1989ஆம் ஆண்டு ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பதிப்பான ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’ தமிழாக்கத்தை மௌலவி, முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். இதன் அரபி மூலத்தைச் சுருக்கித் தந்தவர் ஹாஃபிள், அப்துல் அழீம் அல் முன்திரீ (ரஹ்) அவர்கள் ஆவார். பின்னர் நாஸிருத்தீன் அல்பானீ அவர்களின் விளக்கக் குறிப்புடன் வெளிவந்தது. இந்தத் தமிழாக்கம் நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.


    அடுத்து 1964ஆம் ஆண்டு பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தொண்டி எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள், ‘ஹதீஸ் – பெருமானாரின் பொன்மொழிப் பேழை’ எனும் பெயரில் நபிமொழித் தொகுப்புகளின் திரட்டைத் தமிழில் தந்தார்கள். இது மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளது. பிரபல நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ உள்ளிட்ட நூல்களிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

          ஹாஃபிள் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 773 – 852) தொகுத்த ‘புலூஃகுல் மராம்’ எனும் நபிமொழித் தொகுப்பு 1999ஆம் ஆண்டு மௌலவி, அப்துல் காதிர் உமரீ அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள்..

         இவையன்றி, உத்தமபாளையம் மௌலானா, முஹம்மது இப்ராஹீம் பாகவி அவர்கள் ‘ஷமாயிலுத் திர்மிதீ’ யைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். அவ்வாறே இமாம் யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 676; கி.பி. 1277) அரபி மொழியில் தொகுத்த ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ எனும் நபிமொழித் தொகுப்பைத் தமிழில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.

ஸிஹாஹ் சித்தா
           1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பிரபல நபிமொழித் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய ஆறு ஆதாரபூர்வ ஏடுகளை (ஸிஹாஹ் சித்தா) தமிழில் கொண்டு வரும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு தொகுப்புகளும் முழுமையாக வெளிவந்துள்ளன.

               ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகங்களிலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகங்களிலும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக் குறிப்பு விளக்கங்களுடன் வெளி வந்துள்ளன. எஞ்சிய நான்கு நபிமொழித் தொகுப்புகளின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஏழு ஆலிம்களைக் கொண்ட ஒரு குழு முழுநேரப் பணியைத் தனியான அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளது.

மார்க்கச் சட்டவியல் (ஃபிக்ஹ்)
           ஃபிக்ஹ் எனப்படும் மார்க்கச் சட்டவியல் நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் நிறைய உள்ளன. தமிழில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. 1968ஆம்ஆண்டில் உத்தமபாளையம் மௌலானா, S.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘கன்ஸுத் தகாயிக்’ எனும் அரபி நூலை அதே பெயரில் மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். தேவதானப்பட்டி மௌலானா அப்துல்கரீம் நூரீ அவர்கள் ‘ஃபிக்ஹின் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள்.

       மௌலவி, ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் ‘ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். `பத்ஹுல் முஈன்’ போன்ற அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இரு பாகங்களில் வெளிவந்துள்ளது.

வரலாறு
         இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே. அந்தத் தொகுப்பு ஆதாரபூர்வ வரலாற்று நூலாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

         எகிப்து நாட்டு அறிஞர் முஹம்மத் ரிளா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) வரலாற்றை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற பெயரில் அரபியில் எழுதியதை இதே பெயரில் உத்தமபாளையம் மௌலானா, S.S அப்துல்காதிர் பாகவி அவர்கள் 1962ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.

         இந்தியரான மௌலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதிய ‘அர்ரஹீகுல் மக்த்தூம்’ எனும் நபி (ஸல்) அவர்களின் முழு வரலாற்று நூல் பிரபலமான ஒன்று. இதை ‘ரஹீக்’ எனும் பெயிரல் ‘தாருல் ஹுதா’ நிறுவனத்தார் 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டனர். இந்நூலை மௌலவி, அ. உமர் ஷரீப் காசிமீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.

      பேராசிரியர் சையித் இப்ராஹீம், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், ஜமால் முஹம்மத், இலங்கை அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர், எழுத்தாளர் ஹசன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான், கவிஞர் பாப்ரியா உள்ளிட்டோர் இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தமிழில் எழுதியுள்ளனர்.

    இந்த தகவல்கள் சென்னை ரஹ்மத் அறகட்டளையில் பணிபுரியும் முஹம்மது கான் பாகவி அவர்களின் கட்டுரையுள் இருந்து எடுத்தது. இன்னும் குர்ஆன் விளக்கவுரை முழுவதும் தமிழில் வரவில்லை என்பதும் இஸ்லாமிய நூல்கள் கால்வாசிகூட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்பது வருத்தமான செய்திதான்

No comments:

Post a Comment