Monday, February 16, 2015

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்

அஸ்ஸலாம் அழைக்கும் வரஹ்...

         இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும் சிறந்து விளங்கினார். 226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்லமையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கிலேயப் படைகளை திணறடித்தது.

         மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் அன்றைய  குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.

        பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தின் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்தியது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.

        எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கூறினார்கள். நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

        வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள “உல்விச்” அருங்காட்சியகத்தில் உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

       இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும், திப்புவின் ராக்கெட் 2.2Kg முதல் 5.5Kg வரை இருந்தது என்றும். இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள், இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது என்றும், ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாஸாவில் டாக்டர் அப்துல் கலாம் கலாம் கண்ட காட்சி:
        இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக்பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது “அக்கினிச் சிறகுகள்” நூலில் விவரித்துள்ளார்.

        ''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள்.

        அந்த ஓவியத்தின் திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஒரு உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.

No comments:

Post a Comment